ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் அதிரடி கைது
அரசு டெண்டர் பெற்று தருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அவரது உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரையில் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். மதுரை தபால்தந்தி நகர் அருகில் உள்ள கலைநகரில் வசிப்பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தது முதல் அவரிடம் உதவியாளராக (பிஏ) இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஜெய் பாலாஜியும், கலாவதியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். கலாவதி பட்டயக் கணக்காளராக உள்ளார். நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதும், செல்வாக்கு மிக்க நபராக ஜெய் பாலாஜி வலம் வந்தார். அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல வேலைகளை கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார்.
இப்படி கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை தனது பெயரிலும், மனைவி மற்றும் பினாமி பெயர்களில் முதலீடு செய்தார். ஜெய் பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அமைச்சர் அவரை எச்சரித்து, பணியில் இருந்து நீக்கினார்.
மதுரையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் பல்வேறு வேலைகளைச் செய்து தருவதாகக் பணம் பெற்றது. மாநகராட்சியில் சில வேலைகளைச் செய்து கொடுக்க ரூ.50 லட்சம் வரை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, மருதம் ரியல் எஸ்டேட் பெயரில், தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை வழங்குவதாக கணவன், மனைவி இருவரும் பொதுமக்களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்றியுள்ளனர். அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டும், ரியல் எஸ்டேட் பெயரிலும் ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணவன், மனைவி மற்றும் பினாமிகள் பெயர்களில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் ஆவணங்களைச் சேகரிக்கிறோம். இந்த சொத்துகளைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

