AJITH அரசியல் ENTRY?..அஸ்தமனமாகும் விஜய்யின் அரசியல் வாழ்க்கை?..சீனிவாசன் சொன்னது என்ன?

”நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் விஜய் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 17, 2026 - 08:12
Sep 17, 2026 - 08:18
AJITH அரசியல் ENTRY?..அஸ்தமனமாகும் விஜய்யின் அரசியல் வாழ்க்கை?..சீனிவாசன் சொன்னது என்ன?
Dindigul Srinivasan

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், புதிதாக கட்சி தொடங்கிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தேர்தலில் போட்டியிட்டு, 118 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடினார்.

இதன் மூலம் தற்போது விஜய் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி அமைத்து 100 நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது அங்கு, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் செப்-12 ஆம் தேதி தொடங்கி வைத்தார். நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் அங்கு சென்றார். கார் பந்தயம் நடைபெறும் களத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு அஜித் குமாரை ஓடிச் சென்று ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் மூலம் அஜித்குமார் - முதலமைச்சர் விஜய் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இறுதியில் இருவரும் இணைந்து போட்டோஷூட்டும் நடத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இந்த சந்திப்பு அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெற்றதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

நீண்ட நாட்களாகவே இருவரும் சினிமா துறையில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அஜித்குமார் இதற்கு முன்பு பல கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அப்போது அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பது அல்லது சந்திப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை.

ஆனால் தற்போது நடிகராக இருந்து முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இந்த இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருவரின் சந்திப்பின் பின்னணியில் அரசியல் லாபம் உள்ளதா என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஏனென்றால் வருகிற அக்-6  ஆம் தேதி நடைபெற இருக்கிற இடைத்தேர்தலை நோக்கமாக கொண்டு தான் இந்த சந்திப்பும் என்றும், இதன் பின்னணியில் அஜித்குமார் ரசிகர்களின் வாக்குகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் அஜித்குமாருக்கு இருக்கும் ரசிகர்களில் சில லட்சம் பேர் ஆதரவளித்தாலே அது அரசியல் ரீதியாக சாதகமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதேபோல், அஜித்குமார் திரைப்பட தயாரிப்பு தொடர்பான விஷயங்களில் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், விஜய்யுடன் நெருக்கம் காட்டுவது அவரது திரை வியாபாரத்திற்கு கூடுதல் பலன் தரும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் இந்த சந்திப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸை தொடங்கி வைப்பதற்காக விஜய் லண்டன் சென்றார். மக்கள் பணத்தை தொட மாட்டேன் என்று கூறிய விஜய், இன்று மக்கள் பணத்தில் அஜித்குமார் கார் ரேஸ் போட்டியை தொடங்கி வைக்க சென்றுள்ளார்.

விஜய்க்கு எதிராக சினிமாவில் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் நடிகர் என்றால் அது அஜித்குமார் தான். அவர் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.

அஜித்குமாரின் ரேஸை தொடங்கி வைக்க விஜய் சென்றது அன்பினால் அல்ல. ‘நீயும் என் நண்பன்தான்... அரசியலுக்கு வந்துவிடாதே’ என்று சொல்வதற்காகத்தான் லண்டன் சென்றுள்ளார். இதுதான் உண்மை. சென்னையில் செய்ய வேண்டிய பணிகளை மறந்து லண்டன் சென்றுள்ளார்” என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow