மூசாவை நம்பி மோசம் போன ரசிகர்கள்?.. ரத்து செய்யப்பட்ட விஜய் லண்டன் ரசிகர் சந்திப்பு.. பின்னணி என்ன?
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின்போது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு, எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகரித்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ரசிகர்களை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள விஜய், அங்கு ‘தி ஷார்ட்’ பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவர் லண்டன் வந்தது முதல் விமான நிலையம், ஹோட்டல் மற்றும் சில்வர்ஸ்டோன் பந்தயத் திடல் உள்ளிட்ட இடங்களில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் விஜய்யின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள கோர் செல் அதிகாரிகளும், அங்குள்ள போலீஸாரும் கூட்டத்தை நிர்வகிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களிடம் அவரது தனிப்பட்ட பாதுகாவலர் மூசா தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் வாயிலாக வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் தங்கியிருந்த ஹோட்டல் அருகே ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. ரசிகர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு மற்றும் அனுமதி தொடர்பான நடைமுறைகள் முழுமையாக முடிவடையாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது.
பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு லண்டன் காவல்துறையின் அனுமதியும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ‘தி ஷார்ட்’ அமைந்துள்ள பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த பகுதியில் இருந்த பிற விவிஐபிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரசிகர் சந்திப்புக்கு உள்ளூர் போலீஸார் அனுமதி வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்கெனவே திரண்டிருந்த ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதிலும் விஜய்யின் பாதுகாப்புக் குழுவினர் சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. கோர் செல் டிஐஜி தர்மராஜ் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை சமாளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://x.com/madraspaiyanda/status/2100106999598125319?s=20
இதற்கிடையே, ரசிகர் சந்திப்பு குறித்த தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதே தற்போதைய கூட்ட நெரிசலுக்கு காரணமாகியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், மூசா விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் வெளிப்படையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://x.com/ItzGokulVJ/status/2099816216932286886?s=20
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திட்டமிடப்பட்ட சந்திப்பு நடைபெறாமல் போனது, லண்டனில் விஜய்யை காண வந்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

