விஜய் அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளின் ஊழல் புகார்களையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

விஜய் அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!

கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த அனைத்து ஊழல் புகார்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக அரசுக்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் மீது தவெக அரசு விசாரணை மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இதனுடன், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த பிஜிஆர் எனர்ஜி ஊழல், ஊட்டச்சத்து பெட்டக ஊழல், பொங்கல் வேட்டி ஊழல், போக்குவரத்துத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல் தொடர்பான ஊழல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்து புகார்களும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "நீண்ட நாட்களாக விவாதத்துக்கு உள்ளாகியுள்ள மற்றொரு விவகாரத்துக்கும் விளக்கம் கிடைக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்படுவது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்துக்குப் பிறகு, 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. அந்த முதலீடு இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், இந்த விவகாரத்திலும் உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றும் அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow