நீதிமன்ற வளாகத்தில் வெறி செயல் : ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிபதி மீது அரிவாள் வீசிய நபர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் அரிவாள் வீசினார். நீதிமன்ற வளாகத்திற்குள் அரிவாள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாலமுருகனு்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியுள்ளார். நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீதே அரிவாள் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி அரிவாள் வீசிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் செயலாகும்.
தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால், செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மேற்கொண்ட இந்தக் கொடூரத் தாக்குதல், சட்டத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புனித இடமாகும். அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
தீர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்தால், சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு வழிமுறைகள் உள்ளன; வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நீதிமன்றங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
What's Your Reaction?

