தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவாக உள்ளது - திருமாவளவன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம், டெல்லியில் விளையாடியது போல் தமிழகத்தில் விளையாட முடியாது டெல்லி வேறு தமிழ்நாடு வேறு மதுரையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Jun 9, 2025 - 17:32
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவாக உள்ளது - திருமாவளவன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவாக உள்ளது - திருமாவளவன்

மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், 

"2026 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களின் பேராதரோடு மாபெரும் வெற்றியைப் பெறும். அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.  அமித்ஷா மட்டும்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார் அதிமுக பாஜக கூட்டணி, கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை கூட்டணி ஆட்சி குறித்து எந்த கருத்தும் சொல்லவில்லை. 

அதிமுகவிற்கு கூட்டணி ஆட்சி உடன்பாடு இல்லையா என்பதை முதலில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் அதன் பிறகு கருத்து சொல்லலாம்.  பாஜக தான் மதவாத சாதியவாத அரசியலை செய்கிறது. எல்லா மாநிலங்களிலும் இப்படி அரசியல் செய்து தான் வன்முறைக்கு வித்திடுகிறார்கள். ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பகைமையை வளர்க்கிறார்கள். இது ஊர் அறிந்த உண்மை உலகறிந்த உண்மை. ஆனால் அவர் திமுக அரசின் மீது பழி போடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியாக இருக்கிறது. 

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக அந்த பகுதி சார்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் பகைமை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே பகையை உண்டு பண்ணுவதற்கு தீயை மூட்டிவிடுவது பாஜக சங் பரிவார அமைப்புகள். ஏற்கனவே கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இப்போது மீண்டும் அமித்ஷா பத்த வைக்க பார்க்கிறார். 

தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் இதற்கு ஏமாந்து விட மாட்டார்கள். பழியாக மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம் டெல்லியில் விளையாடியது போல் தமிழகத்தில் விளையாட முடியாது. வட இந்தியா வேறு தென்னிந்தியா வேறு. டெல்லி வேறு தமிழ்நாடு வேறு. தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட பூமி. ஆனால் அவர்கள் முயற்சித்து பார்க்கிறார்கள் தமிழ்நாட்டை மாற்றிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அரசியலில் முதிர்ச்சடைந்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். 

எதிர்க்கட்சிகள் சிதறி கிடக்கின்றன. அதிமுக பாஜகவும் சேர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். தேர்தல் கூட்டணி உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படையாக பேசவில்லை. அமித்ஷா மட்டும்தான் கூட்டணி பற்றி பேசுகிறார். அதிமுக தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தி பேசவில்லை. 

வடக்கே போனால் ராமர் கிருஷ்ணர் விநாயகர், காளி, துர்கா என்பார்கள் தமிழகத்தில் முருகனை தூக்கிபபிடிக்கிறார்கள். எல்லா கட்சிகளும் முருக பக்தர்கள் இருக்கிறார்கள். திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் , மதிமுக போன்ற கட்சிகள் உள்ள முருக பக்தர்கள் எல்லாம் ஏமாந்து அவர்கள் பின்னால் போவார்கள் என்று கருதுகிறார்கள். கட்சி சார்பற்ற முருக பக்தர்களும் நம்பி பின்னால் சென்று உயர்த்தி பிடிப்பார்கள் என நம்புகிறார்கள். அதற்கு இடம் இருக்காது. தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தும். ஒடிசாவில் தமிழனையா முதல்வர் ஆக்க போகிறீர்கள் என்று சொன்னவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் கடவுள் முருகனை தூக்கி பிடிப்பது உயர்கல்வியிலே தமிழ் வழி கல்வி வேண்டும் என்கிறார் இவையெல்லாம் நாடாக அரசியல். இது தமிழ்நாட்டில் எடுபடாது.

2026 தேர்தலில் திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி இரு துருவ போட்டி தான் இந்த தேர்தலில் நடக்கும்" என திருமாவளவன் அப்போது தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow