காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
சென்னை மாநகரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை நொளம்பூர் அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு என புகார் அளித்த பட்டியல் இனத்தவரை அவமானப்படுத்தியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நீதிபதி வேல்முருகன் முன்பு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜரானார். அப்போது, எந்த புகாரும் வரவில்லை எனவும், புகார் வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் சென்னை ,மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
What's Your Reaction?






