100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக சிதைக்கிறது : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் மத்திய பா.ஜ.க. அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது; தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது மத்திய பா.ஜ.க. அரசு! மூன்று விவசாயச் சட்டங்கள், சாதி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்!
எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!- என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?

