மறு தணிக்கை குழு இன்று படத்தை பார்க்கல, ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் தொடரும் சிக்கல்
ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை குழு இன்று மதியம் பார்வையிட இருந்தநிலையில் தள்ளி போயுள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.
ஜனநாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.இதனைத் தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தை படக்குழு நாடிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.மேலும், தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனிநீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கு திரும்பப் பெறப்பட்டு, மறுதணிக்கைக்கு படக்குழு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி இன்று மாலை 2.30 மணியளவில் பார்க்க இருந்தனர். ஆனால் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால், ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழு இன்று பார்க்கவில்லை என்பதால், பட வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.
What's Your Reaction?

