சிறுமி பாலியல் வன்கொடுமை.. விடுதி காவலாளிக்கு ஜூன் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், காவலாளி மேத்யூவை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் அருகேயுள்ள அரசு சேவை இல்லத்தில், எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தின் போது தப்பியோட முயன்ற அச்சிறுமியை இரும்பு ராடால் தாக்கியதில், அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அரசு தங்கும் விடுதியின் காவலர் மேத்யூவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது, இதனையடுத்து மேத்யூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிட்லபாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மேத்யூவின் மகன் செய்தியாளர்களை தாக்கியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், காவலாளி மேத்யூவை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், அங்கு இரண்டு சிசிடிவி கேமராக்களைத் தவிர வேறு எதுவும் செயல்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
What's Your Reaction?






