திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற வேண்டும் என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்த மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வீட்டுக்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக மதிமுக கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவை கட்டாயப்படுத்தியதாக வைகோ தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை கடந்த வாரம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய வைகோ, பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், கலந்துகொண்ட உறுப்பினர்கள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தவெக கூட்டணியில் இணையும் பட்சத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் கூட்டத்தில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார், ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துவிட்டேன் என செந்தில் செல்வன் பேட்டி அளித்தது போன்ற செய்தி உலா வருகின்றன.
What's Your Reaction?