பரந்தூர் புதிய விமான நிலையம் வேண்டாம்: 17வது முறையாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
பரந்தூரில் புதிய விமான நிலையம் வேண்டாம் என ஏகனாபுரம் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதே கருத்தை வலியுறுத்தி 17-வது முறையாக இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர்.
சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூர் புதிய விமான நிலையம் வர உள்ளது. இதற்காக 5,746.18 ஏக்கர் நிலத்தை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. நிலத்தை எடுப்பதற்கு தமிழ்நாடு தொழில்துறை அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக அரசு சுமார் 1,822.45 கோடி ரூபாய் இழப்பீடு தரப்போகிறது.
இதற்கான அரசாணை 2023 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வட்டங்களில் இருக்கும் கிராமங்களில் இருந்து நிலம் எடுக்கும் வேலைகள் நடக்கின்றன. ஆனால் தங்கள் வாழ்வாதாரம், விவசாய நிலம், குடியிருப்புகள் பறிபோகும் என அப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில ஊர்களில் விவசாய நிலங்கள் போகின்றன, சில ஊர்களின் குடியிருப்புகள் எடுக்கப்பட உள்ளன.
ஆனால் ஏகனாபுரத்தை பொறுத்தவரை அந்த ஊர் மொத்தமாகவே விமான நிலைய திட்டத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனால் அந்த பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று 26.01.26 ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பரந்தூர்புதிய விமான திட்டத்தை எதிர்த்தும் மாநில அரசு திட்டத்தை கைவிடக் கோரியும் தொடர்ந்து 17வது முறையாக கிராம மக்கள் சார்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
ஏகனாபுரம் கிராம மக்கள் ஏற்காத வரை எந்த காலத்திலும் எந்த அரசு வந்தாலும் பரந்தூர்புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதை மாநில அரசு புரிந்து கொண்டு பரந்தூர்புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என பாதிக்கப்படுகின்ற 13 கிராம மக்கள் சார்பாக போராட்ட குழு கேட்டுக்கொண்டு உள்ளது.
What's Your Reaction?

