பிரசவத்துக்குப் பிறகான மனச்சோர்வு (Postpartum Depression) - எதிர்கொள்வது எப்படி?

Feb 23, 2024 - 13:19
Feb 23, 2024 - 14:20
பிரசவத்துக்குப் பிறகான மனச்சோர்வு (Postpartum Depression) - எதிர்கொள்வது எப்படி?

தாய்மை அடைவது பெரும் பேறு என்று சொன்னாலுமே கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் ஒரு தாய் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல பிரச்னைகளைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. சரி, குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நினைத்தால் அதுவும் இல்லை. பிரசவத்துக்குப் பிறகும் சில உளவியல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். இதைப்பற்றி விரிவாக விளக்குகிறார் மன நல மருத்துவர் ஜெயக்குமார்...

 
‘‘பிரசவத்துக்குப் பிறகு நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக, குழந்தை பிறந்து 4-6 வாரங்களுக்குள் 30 - 75 சதவிகித பெண்களுக்கு baby blues எனும் உளவியல் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடல் சோர்வு, சோகம், அழுகை, குழப்ப நிலை ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். நமது ஒவ்வொரு நடவடிக்கைக்குக் பின்பும் ஏற்படும் மன அழுத்தத்துக்கென அளவீடுகள் இருக்கின்றன. அதன்படி பிரசவிப்பது 75 சதவிகித மன அழுத்த அளவு கொண்டது. பிரசவத்துக்குப் பிறகு ஒரு குழந்தையின் தாய் என்கிற  பொறுப்புகளுக்குள் வரும்போது அது தரும் அழுத்தமே இதற்குக் காரணமாகிறது. இந்த baby blues இயல்பான பிரச்னை என்பதால் இதற்கு மருந்து, மாத்திரைகள் தேவையில்லை.  இது சாதாரண பிரச்னைதான் என்பதை உணர வைத்து, அவரை ஆற்றுப்படுத்தினாலே போதும். இரண்டு வாரங்களில் இப்பிரச்னையிலிருந்து விடுபட்டு விடுவார்கள்.

இரண்டு வாரங்களைக் கடந்தும் இப்பிரச்னை தொடர்கிறது என்றால் அவருக்கு postpartum depression இருக்கிறதா? என்று பரிசோதிக்க வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு 3-6 மாத காலங்களில் 10 - 15 சதவிகித பெண்களுக்கு postpartum depression ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனைக் கண்டறிந்து முறையான சிகிச்சை வழங்காமல் விட்டால் அப்பிரச்னை இன்னும் தீவிரமாகி விடும். ஆண்டுக்கணக்கில் கூட இப்பிரச்னை நீடிக்க வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்னைக்கு ஆட்பட்டவருக்கு மன அழுத்தம், கவலை ஆகியவை மிகத்தீவிரமாக இருக்கும். பதற்றம், தூக்கமின்மை, எடையில் மாற்றம் ஆகியவை இருக்கும். இப்பிரச்னை மரபு ரீதியிலாகக் கூட ஏற்படலாம். இதற்கு ஆளானவர்களுக்கு  தங்களது குழந்தையை எதாவது செய்து விடுவோமோ? என்கிற பயம் கூட வரலாம்.


குழந்தையை ஏதாவது செய்வதற்கான எண்ணங்கள் கூட வந்து போகலாம். அப்படிப்பட்ட சூழலில் அவரிடமிருந்து குழந்தையை கண்காணிக்க வேண்டும். தற்கொலை எண்ணங்கள் கூட வரலாம் என்பதால் உடனடியாக தீர்வை நோக்கி நகர வேண்டும். மகிழ்ச்சியின்மை, எவ்வித உணர்ச்சிகளையும் உணர முடியாமல் இருக்கும் நிலை (anhedonia எனும் in ability to feel plesure) ஆகியவை இப்பிரச்னையின் முக்கிய அறிகுறிகள் ஆகும். 

இப்பிரச்னைக்கு ஆட்பட்டவர்கள் மன நல மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருந்து, மாத்திரைகள் மற்றும் கவுன்சிலிங் மூலம் இப்பிரச்னையிலிருந்து பாதிக்கப்பட்டவரை விடுவிக்க முடியும். இதிலேயே கொஞ்சம் அரிதாக postpartum psychosis எனும் பிரச்னை ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தீவிர மனநோய்களுக்கு உண்டான அறிகுறிகள் இப்பிரச்னையால் ஏற்படும். தவறான நம்பிக்கை, தனக்கு எதிராக எல்லோரும் செயல்படுகிறார்கள் என்பது போன்ற எதிர்மறையான எண்ணம், காதில் குரல் கேட்பதைப் போன்ற பிரம்மை (hallucination) ஆகியவை ஏற்படும்.


காதில் ஒலிக்கும் குரல் குழந்தையைக் கொன்று விடு என்றும் சொல்வது போலான பிரம்மை ஏற்படும். அதன் காரணமாக நூற்றில் 4 பேர் குழந்தையை கொல்வதற்கும், 5 பேர் தற்கொலை செய்து கொள்வதற்கும் வாய்ப்பிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? பிரச்னையின் தீவிரத்தை நாம்தான் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்பிரச்னை கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கும். மன நலப் பிரச்னைகள் சார்ந்த விழிப்புணர்வு பரவலாக சென்றடைய வேண்டும். அப்படி செல்கையில் இப்பிரச்னை பற்றிய புரிதல் இருக்கும்போது இதனை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.’’ என்கிறார் ஜெயக்குமார்.

- கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow