மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம் என சென்னை ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையிலும், கடலூரில் அன்புமணி தலைமையிலும், மதுரையில் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. எண்ணெய், பால் விலை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. மக்கள் குடும்பம் நடத்த கஷ்டப்படும் நிலை உள்ளது. ஆனால் முதல்வர் தினந்தோறும் போட்டோஷூட் நடத்துகிறார். இதுதான் திமுக அரசின் சாதனை. டாஸ்மாக்கில் ரூ.24,000 கோடி கொள்ளையடிக்கின்றனர்.
சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நட்களே இல்லை எனும் அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது. தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர். வளரச்சியில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் சொல்கிறார். ஆமாம்.. கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. அனைவரையும் கடனாளி ஆக்கிவிட்டது திமுக.
தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழகத்தில் ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. வாக்குறுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார். நான்கில் ஒரு பங்கு வாக்கை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.
2026 ஜனவரி மாதம் நடந்த மொத்த கொலைகள் 110, பிப்ரவரி மாதம் 84, மார்ச் மாதம் 17ம் தேதி வரை 82 கொலைகள், கடந்த 75 நாட்களில் 246 கொலை நடந்துள்ளது. கொலைகள் நடக்காத நாளே இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து யாருக்கும் பாதுகாப்பில்லை. கடந்த ஒரு வருடத்தில் 1408 கொலைகள் நடந்துள்ளது, இதற்கு அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் முன்வந்து பதில் சொல்ல முடியாத நிலை.
சிவகங்கை அஜித்குமார் கொலை, ஆகாஷ் லாக்கப் மரணம் என்று லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடக்கின்றன. திமுக 525 வாக்குறுதி கொடுத்தது, அதில் நான்கில் ஒரு பங்கு கூட செய்யவில்லை. ஆனால், 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய் சொல்கிறார். மக்கள் திமுகவின் பொய்யைப் புரிந்துகொண்டனர், ஆட்சியை விரட்டியடிக்க முன்வந்துவிட்டார்கள். அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், தூய்மைப் பணியாளர்களை திமுக அர்சு கொடுமைபடுத்தியது. சத்துணவு அமைப்பாளர்களும் போராடினார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை என்பதுதான். உச்சநீதிமன்றம் சொல்லியும் நியமிக்கத் திராணியற்ற அரசு திமுக அரசு. நான் சொல்வது எல்லாமே பத்திரிகையிலும் ஊடகத்திலும் வந்தவை, இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை மீடியாவுக்கு இருக்கிறது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஊழல் விளம்பரம் மட்டும் செய்த திமுக ஆட்சியின் ஆட்டம் கடந்த 15ம் தேதியோடு முடிவு கட்டப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம்..’’ இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

