‘உன்னைக் காணாமல் நான் ஏது?’ – கங்கை அமரன் பகிர்ந்த நினைவுகள்!

ராமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடல் என பலரும் நினைத்துவரும் ‘உன்னைக் காணாமல் நான் ஏது’ பாடலின் உண்மையான பின்னணியை கங்கை அமரன் பகிர்ந்துள்ளார்.

Sep 4, 2026 - 09:00
‘உன்னைக் காணாமல் நான் ஏது?’ – கங்கை அமரன் பகிர்ந்த நினைவுகள்!
Gangai Amaran

‘உன்னைக் காணாமல் நான் ஏது?’ராமராஜன் படம் இல்லையா?
பாட்டு பிறந்ததை சொல்லும் கங்கை அமரன்!

படங்களைச் சொன்னாலே பாடல்கள் ஞாபகத்துக்கு வந்துவிடுவது என்பதுதான் யதார்த்தம். ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, படத்தையோ படத்தின் தலைப்பையோ நினைவுப்படுத்திக்கொள்வது என்பது இன்னொரு வகை. நாம் நினைக்கிற பல பாடல்கள் கண்ணதாசன் என்று நினைத்திருப்போம். ஆனால் வாலி எழுதியிருப்பார். அதேபோல் எண்பதுகளில் வைரமுத்து எழுதிய பாடல் என நினைத்து பந்தயமே கட்டுவோம். ஆனால் அந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியிருப்பார். அப்படியொரு கங்கை அமரன் பாடல் ஒன்றைச் சொல்ல நினைக்கிறேன்.

’எனக்கு நல்ல நல்ல பாடல்கள் போட்டுக்கொடுத்ததை விட, கமலுக்குத்தான் சூப்பர் பாடல்களா இளையராஜா போட்டுத்தந்தார். கமலைத்தான் ராஜா சாருக்கு ரொம்பப்பிடிக்கும்’’ என்று இளையராஜா 75 விழா மேடையில் இசைஞானியையும் கமல்ஹாசனையும் வைத்துக்கொண்டே சூப்பர்ஸ்டார் சொன்னார். உடனே இளையராஜா, ‘நான் ராமராஜனுக்கும்தான் கொடுத்திருக்கேன்’ என்று பொதுவாகச் சொல்லி இலகுவாக எடுத்துக்கொண்டார்.

உண்மையில், பெரிய கம்பெனி, சிறிய தயாரிப்பாளர், பெரிய நடிகர், அறிமுக நடிகர், பிரபல இயக்குநர், புதிய இயக்குநர் என்கிற எந்தப் பாகுபாடும் இல்லாமல்தான் இளையராஜா ஆயிரத்து ஐநூற்று சொச்ச படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்! நான்குநாட்களுக்கு முன்பு, திருச்சியில் உள்ள என் பள்ளித்தோழன்  பேசினான். ‘மாப்ளே... இந்தப் பாடலைக் கேட்டதும் நீயும் நானும் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்ததெல்லாம் ஞாபத்துக்கு வந்துச்சு. ராமராஜன் படம். இளையராஜா இசை. படம் ஓடலை.

ஆனால் பாட்டு மனசுல தங்கிருச்சுடா’ என்றான். நான் சொன்னேன்...’அது இளையராஜா இசைதான். ஆனால் நீ அந்தப் படத்தைப் பாக்கவே இல்ல. தவிர அதுல ராமராஜன் நடிக்கலைடா. புதுமுகம் நடிச்ச அந்தப் படம் ‘கவிதை பாடும் அலைகள்!’ என்று விவரித்தேன். அந்த நண்பன் மட்டுமல்ல... பலரும் இந்தப் பாட்டு ராமராஜனுக்கான பாட்டு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘உன்னைக் காணாமல் நான் ஏது, உன்னை எண்ணாத நாளேது’ என்கிற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? ‘ஏங்க... ராமராஜன் படம்தான். வைரமுத்து எழுதியது’ என வரிந்துகட்டிக்கொண்டு வருவீர்கள்.

ஆனால், டிகே போஸ் இயக்கிய இந்தப்படம் ‘கவிதை பாடும் அலைகள்’. ஜெயக்குமார், ராஜ்மோகன், ஜனனி என பலரும் நடித்திருந்தார். இந்த ஜனனி பின்னாளில் ஈஸ்வரி ராவ் ஆனார் என்பது தனிக்கதை. பாரதிராஜாவிடம் பணியாற்றிய டிகே போஸ், இயக்கிய பல படங்கள் வெற்றிபெற்றன. சில படங்கள் தோல்வி அடைந்தன. 90ல் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசை. வைரமுத்து எழுதவில்லை. இவர்களின் பிரிவு முன்னதாகவே நிகழ்ந்துவிட்டது. பாடலை எழுதியவர் கங்கை அமரன்.

‘உன்னைக்காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான்’ என்கிற வரிகளில் காதல் சுவையைத் தந்திருப்பார் கங்கை அமரன்.

‘’அண்ணனுக்கு யார் நடிக்கிறாங்க, யாரு எடுக்கிறாங்கன்னெல்லாம்  கிடையாது. அவர்கிட்ட படம் வந்திருச்சுன்னா, அது அண்ணனோட படம், அவ்ளோதான். வேற எந்த சிந்தனையும் தனிப்பட்ட விருப்புவெறுப்பு எதுவுமே கிடையாது அவருக்கு! தயாரிப்பாளரோட கஷ்டநஷ்டங்களையெல்லாம் புரிஞ்சிக்கிட்டு, ‘நானே எழுதிடுறேன்’ன்னு சொல்லுவார். ‘அமர் எழுதிருவான்’ன்னு சொல்லுவார். ‘நெப்போலியன் நீதான் இந்தப் பாட்டைப் பாடுறே’என்பார். அப்படி நிறைய பாடல்கள் உருவாகியிருக்கு. அதுல ‘உன்னைக் காணாமல் நான் ஏது’ங்கற பாடலும் உண்டு’’ என்று இன்றைய காலைவேளையில் கங்கை அமரனிடம் பேச, உற்சாகம் குறையாமல் விவரித்தார். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கங்கை அமரனே எழுதியிருந்தார்.

’கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக்கரையெல்லாம்
காலடி தேடி வந்தேன்
கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்
வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்
ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டுகாலம்
இனி எந்நாளும்
பிரிவேது
அன்பே...’ என்று அருண்மொழி என்கிற புல்லாங்குழல் கலைஞர் நெப்போலியனும் சித்ராவும் குழைந்து தேன் குழைத்துப் பாடியிருப்பார்கள். நடுவே வயலினும் புல்லாங்குழலும் காதல் செய்துகொண்டிருக்கும். அவையெல்லாம் ராஜமாயாஜாலம்.மாய ராஜாஜாலம்!
’ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
இது மாறாது
மறையாது
அன்பே...’ என்று நீர்நிலைகளையும் வானமேகங்களையும் ஜீவசந்திப்புகளையும் சங்கமித்தலையும் கங்கை அமரன் தன் எளிய வரிகளில் இனிமையாக்கி அசத்தியிருப்பார்!

‘’அண்ணன் டியூன் சொல்லிட்டாரு. இந்தப் பாடலை அடுத்த அரைமணி நேரத்துல எழுதிக்கொடுத்துட்டேன். ஆனா வார்த்தைகளையும் வாத்தியங்களையும் அண்ணன், காதல் உணர்வை மென்மையா தூவிவிட்டிருப்பாரு. இப்படியெல்லாம் இந்தப் பாடல்கள் இன்னிக்கும் நிக்கிறதாலதான், அவரை இசைஞானின்னு கொண்டாடுறோம். இளையராஜாவோட தம்பின்னு சொல்லிக்கிறதுல எனக்கு ரொம்பவே பெருமை. இதைவிட வேறென்ன வேண்டும்?’’ என்று சிலிர்த்து நெகிழ்கிறார் கங்கை அமரன்.

இந்தப் பாடலை இன்றைய ஜென் ஸீ தலைமுறையினர் கேட்டால்... ’உங்கள் பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமை’ என்று இவர்களும் ரீல்ஸ் போட்டுக் கொண்டாடுவார்கள்!

- வி.ராம்ஜி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow