ஜனநாயகன்  பட தயாரிப்பாளருக்கு டெல்லி பிரதிநிதியாக நியமனம்: அரசியல் கட்சி தலைவர் கண்டனம் 

விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்த வெங்கட் நாராயணாவை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

ஜனநாயகன்  பட தயாரிப்பாளருக்கு டெல்லி பிரதிநிதியாக நியமனம்: அரசியல் கட்சி தலைவர் கண்டனம் 
டெல்லி பிரதிநிதி நியமனம் தலைவர்கள் கண்டனம்

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு அல்லது அதன் தேவை நீங்கும் வரை அனுமதி பொறுப்பில் இருப்பார். மேலும் இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, தமிழக அரசு சார்பாக டெல்லியில் சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி. அரசு கார், கிரீன்வேஸ் சாலை பங்களா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இவருக்கு அளிக்கப்படும். சென்னை, தலைமை செயலகத்திலும் டெல்லி பிரதிநிதிக்கு தனி அறை ஒதுக்கப்படும். அந்த வகையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நேற்று நியமித்துள்ளது.

முதல்வர் விஜய் படத்தின் தயாரிப்பாளரும், அவரது நண்பரும், அவருக்கு எல்லா வகையிலும் உதவக்கூடிய ஒருவரை, அதுவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து இருப்பது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  குறிப்பாக காவிரி பிரச்னை இரு மாநிலத்துக்கும் இடையே உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்திருப்பது, அந்த வழக்கின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம் என்று கவலைகள் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

அதிமுக ஐடி விங்க்: கர்நாடக காங்கிரஸ் அரசின் ப்ராக்சி கவர்மென்டாக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு?. தமிழ்நாட்டை சாராத, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது ஏன்?. உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற சான்று இருந்தால் போதுமா முதல்வர் விஜய்.

செல்வபெருந்தகை- காங் மாநில தலைவர்: ஜெகதீஸ் என்பவருக்கு பதவி கொடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு அரசாணையை வெளியிடுகிறார்கள். குழப்பங்கள் இல்லாமல் நேர்மையாக செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் விரும்புவது. உண்மையாகவே அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றால் மறுபரிசீலணை செய்யவேண்டும். கர்நாடகாவை சேர்ந்தவர் மேகதாது பிரச்னையில் எப்படி தமிழ்நாட்டுக்கு சாதமாக பேசமுடியும் என்பதுதான் மக்களிடமும் என்னிடமும் உள்ள கேள்வி.

நயினார் நாகேந்திரன் - தமிழக பாஜக மாநில தலைவர்:  முதல்வர் விஜய் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரசின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம் பேசி மேகதாது அணை பிரச்னையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?. மாற்று சக்தி என்று கூறி, காங்கிரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!

டிடிவி தினகரன்- அமமுக பொதுச்செயலாளர்: மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத் தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow