அரசியல் கொடிக்கம்பங்கள் அகற்றம்: 13 மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
13 தென் மாவட்டங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தக், கோரிய வழக்கு. 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 13 தென் மாவட்டங்களில் முறையான அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசு புறம்போக்கு இடங்கள், மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் மற்றும் சாதிய பிளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் தேவையற்ற மோதல்கள் ஏற்படும் நிலை உள்ளது.
ஆகவே மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 தென் மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தவும், முறையான அனுமதி பெறாதவற்றை உடனடியாக அகற்றவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தும் ஏன் தொடர்ச்சியாக இது போன்ற வழக்குகள் தாக்கலாகின்றன? என கேள்வி எழுப்பி, வழக்கு தொடர்பாக தேனி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?

