'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் மீது இளம்பெண் பாலியல் புகார் : தனது பிளாட்டில் புகுந்து தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு
கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது எர்ணாகுளம் காவல்நிலையத்தில் இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் இது தொடர்பாக பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் இயக்குநர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் 75-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இயக்குநர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் உண்மை தெரிய வந்தால் இயக்குநர் சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு சிதம்பரத்தின் முதல் படமான 'ஜான்.இ.மேன்' (Jan.E.Man) படத்தில் நடித்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவர், சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் கூறியிருந்தார்.ஆனால் அப்போது முறைப்படி புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. தற்போது அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டிருப்பது இயக்குநர் சிதம்பரத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

