"பஞ்சாயத்து ஓவர்" ஹார்மூஸ் நீரிணை வழியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அமைச்சர் தகவல்
ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் சிலிண்டர், பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிகிறது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை தொடர்ந்து, இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்களும் ஹார்மூஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த இரு கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்மூஸ் நீரிணையைக் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்லவும் ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 சரக்கு கப்பல்கள் அனுமதி அளித்ததன் மூலம் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக கட்டுக்குள் வரும் தெரிகிறது.
What's Your Reaction?

