கும்பமேளா புகழ் மோனலிசா முஸ்லிம் இளைஞருடன் திடீர் காதல் திருமணம்
கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனலிசா திடீர் பிரபலம் ஆனார். அவர் முஸ்லிம் இளைஞருடன் திடீர் காதல் திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்றது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற இளம்பெண் மோனலிசா ஒரே நாளில் வைரலானார். அவரது கண்களும், சிரிப்பும், முகத்தோற்றமும் பலரையும் கவர்ந்தது.
ஒரு வீடியோவால் நாடுமுழுவதும் கவனிக்கப்பட்டார் மோனலிசா. ஆனால், அதேசமயம் அவரது அழகு ஆபத்தாகவும் மாறியது. பலரும் மோனலிசாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்களது சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கே திரும்பச் சென்றார் மோனலிசா. தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?

