டெல்லி செங்கோட்டை மியூசியமில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொப்பி திருட்டு
டெல்லி செங்கோட்டையில் உள்ள மியூசியத்தில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தொப்பி காணாமல் போயுள்ளதாக அவரது பேரனும், முன்னாள் பாஜக தலைவருமான சந்திரகுமார் போஸ் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி ஜெயந்தி அன்று, சந்திரகுமார் போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நேதாஜியின் தொப்பி பிரதமர் மோடியிடம் நேரடியாக வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி அந்தத் தொப்பியைப் பெற்றுக்கொண்டு, செங்கோட்டையில் உள்ள நேதாஜி மியூசியத்தின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்தார். சமீபத்தில் Open Platform for Netaji - OPN அமைப்பின் உறுப்பினர் வழக்கறிஞர் நவீன் பாமல் மியூசியத்திற்கு சென்றபோது, அந்தத் தொப்பி அங்கிருந்து காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களால் அந்தத் தொப்பி எங்கே இருக்கிறது என்பது குறித்து எந்த பதிலும் சொல்ல முடியவில்லை என்று சந்திரகுமார் போஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரகுமார் போஸ் தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு, "நேதாஜி நமது நாட்டின் மிகப்பெரிய தலைவர். மியூசியத்தில் இருந்து அவரது தொப்பி காணாமல் போயிருப்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம்.நான் உங்களிடம் நேரடியாக வழங்கிய அந்தத் தொப்பி இருந்த கண்ணாடிப் பெட்டி இப்போது காலியாக உள்ளது. இது குறித்து நீங்கள் தயவுசெய்து விசாரணை நடத்த வேண்டும்." என்று குறிப்பிட்டு தொப்பியைப் பிரதமரிடம் வழங்கிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
What's Your Reaction?

