தமிழக அரசியலில் புதிய ட்வீஸ்ட் : என்டிஏ கூட்டணியில் அமமுக: தினகரனை வரவேற்ற எடப்பாடி
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். அதுபோல அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைந்து இருப்பதை எடப்பாடி பழனிசாமி வரவேற்று இருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார். இந்த நிலையில் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு அதிமுக பாஜக கூட்டணியில் அமமுக இணைந்திருப்பதாக அவரே அறிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலையும் சந்தித்து கூட்டணியை தினகரன் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவை வரவேற்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது: தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் ! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அமமுகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. குக்கர் சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

