கட்சி தாவல்: அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 62 ஆனது
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக, திமுக ஆகிய கட்சிகளில் இணைந்தோடு, தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 62- ஆக குறைந்துள்ளது.
மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம் தொகுதி): ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த நவம்பர் மாதம் அதிமுக-விலிருந்து விலகி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி நீக்கப்படுவதைத் தவிர்க்க, முன்னதாகவே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
கே.ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம் தொகுதி): அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 9 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அதிமுக - ஓபிஎஸ் அணிகள் இணைய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் இறுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார்.
வைத்திலிங்கம் (ஒரத்தநாடு தொகுதி): முன்னாள் அமைச்சரும், தஞ்சை மண்டலத்தின் முக்கியத் தலைவருமான வைத்திலிங்கம், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இன்று இணைந்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி உடல்நல குறைவால் வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார். தற்போது மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய மூன்று உறுப்பினர்களின் ராஜினாமாவால், அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 66-லிருந்து 62-ஆகக் குறைந்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் தனி ஆக செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

