திரவுபதி 2 படத்துக்கு இடைக்கால தடைகோரி வழக்கு: நீதிமன்றம் மறுப்பு
மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலக்காரர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திரௌபதி ரெண்டு படத்திற்கு இடைக்கால தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி- 2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவனங்கள் உள்ளன. திரெளபதி -2 படத்தில் வீர வல்லாள தேவனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இயக்குநர் மோகன் சித்தரித்துள்ளார். திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாள தேவன் என்பதை வீர வல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.
இது உள்நோக்கம் கொண்டது. இது கள்ளர் சமூகத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு அவசரம் அவசரமாக யூ/ஏ சான்றிதழை தனிக்கை வாரியம் வழங்கியுள்ளது. யூ/ஏ சான்றிதழை திரும்ப பெறுமாறு தனிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திரௌபதி- 2 படத்தை தனிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யவும், படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டு என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரவுபதி 2 படத்துக்கு டிச. 31ல் தனிக்கை குழு யூ/ஏ சான்று வழங்கியுள்ளது என்றார். பின்னர் நீதிபதி, தனிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?

