அங்காரக சதுர்த்தி.. இன்று விநாயகரை வணங்கினால்.. திருமண தடை நீங்கும் .. கடன் காணாமல் போகும்

ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். செவ்வாய்கிழமையும், சங்கடஹர சதுர்த்தியும் இணைந்த நாளான இன்று அங்காரக சதுர்த்தி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

Jun 25, 2024 - 07:49
அங்காரக சதுர்த்தி.. இன்று விநாயகரை வணங்கினால்.. திருமண தடை நீங்கும் .. கடன் காணாமல் போகும்


நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்கள், தங்களுக்கு உண்டாகக்கூடிய திருமணத்தடையை போக்கிக் கொள்ள இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளலாம்.  நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம். சங்கட ஹர என்றால் சங்கடங்களை நீக்குவது என்று பொருள்.இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். 

அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவிக்க கடன் பிரச்சினை தீரும். தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் கேது தோஷம் நீங்கும் திருமண தடைகள் அகலும். குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு பூஜை முடிந்தபின் அந்த பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். இப்படி திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்வது மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும். 

ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும்.  தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை அங்காரக சதுர்த்தி என்று அழைக்கின்றனர்.
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை வணங்கி வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் விரத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

குழந்தை வரம் வேண்டுவோர் சதுர்த்தியன்று பச்சரிசியை பொடி செய்து சர்க்கரை சேர்த்து பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும். சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும். குடும்பத்தில் உள்ள வறுமையை அகற்ற வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும்.  

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு ஆளாகி வருபவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow