ஸ்டாலின் VS வைகோ : திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் தவெக போடும் புதுக்கணக்கு
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் களமிறங்கினால், அவருக்கு போட்டியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை போட்டியிட வைக்க தவெக வியூகம் வகுத்து வருகிறது.
சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். அதில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., இருக்கிறது.
சட்டசபையில், 'உங்க அப்பாவை காணேம்' என, முதல்வர் விஜய் விமர்சித்த பின், ஒட்டுமொத்த தி.மு.க., தொண்டர்களும், இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை திமுக துவங்கிவிட்டது. இந்த நிலையில், கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்தது போல திருச்சி கிழக்கிலும் இடைத்தேர்தலிலும் தோற்கடிக்க தவெக வியூகம் வகுத்து வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போதையை மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலை சந்திக்க மதிமுக தயாராகி வருகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை தவெகவுடன் மதிமுக நடத்தி முடித்து இருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. அதில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க., கூட்டணியில் சேரும் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, த.வெ.க., கூ ட்டணிக்கு ம.தி.மு.க., வந்தால், ஸ்டாலினுக்கு எதிராக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவை களமிறக்க த.வெ.க., திட்டமிடுகிறது.
ஏற்கனவே, திருச்சி லோக்சபா தொகுதியில், தீப்பெட்டி சின்னத்தில் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ போட்டியிட்டு வென்று, எம்.பி.,யாக இருக்கிறார். எனவே, அதே சின்னத்தில், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ போட்டியிட்டால், ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி தர முடியும் என, த.வெ.க., காய் நகர்த்த தொடங்கி இருக்கிறது.
What's Your Reaction?