அரசு நிகழ்ச்சி, பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் இனி கட்டாயம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் இனி தேசிய கீதத்திற்கு முன்னதாக 'வந்தே மாதரம்' பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 பத்திகளையும் (3.10 நிமிடங்கள்) முழுமையாக பாட வேண்டும் என்றும், தேசியக் கொடி ஏற்றும்போதும், ஆளுநர் உரை மற்றும் ஜனாதிபதி உரை ஆகிய சமயங்களிலும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமான 'ஜன கண மண' இசைக்கப்படுவதற்கு முன்பாகவே 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். ஜனாதிபதி, கவர்னர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும்.
ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் போன்ற அரசு ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் ஜனாதிபதி உரைக்கு, முதலிலும், கடைசியிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 150-வது ஆண்டு விழாவைக் காணும் இப்பாடலின் ஆறு சரணங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பதிப்பானது, 3 நிமிடம் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும் என கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?

