தமிழகத்தில் சாதி பார்த்து பழகுவதில்லை - ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில் நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை.

Oct 2, 2024 - 21:48
தமிழகத்தில் சாதி பார்த்து பழகுவதில்லை - ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

தமிழகத்தில் அனைவரும் அண்ணன், தம்பியாக பழகி வருகிறோம். தமிழர்கள் யாரும் சாதி பார்த்து பழுகுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தான் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் ரவி தான் ஆளுநர் என்பதை மறைந்துவிட்டது ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் இன்றைக்கு  அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கமலாலயத்துக்கு போட்டியாக ராஜ்பவன் டெல்லியின் சார்பாக அரசியல் செய்துவருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆளுநராக இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இருக்கும் உறவினை உருவாக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் நம் ஆளுநர் அந்த உறவை  எந்தெந்த வகையில் துண்டிக்க முடியுமோ அந்தந்த வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. மேலும், ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர் போலவும்,  நீட் தேர்வின் பி.ஆர்.வோ போலவும் செயல்பட்டு வருகிறார். 

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அது மிக வருத்தம் அளிக்கிறது என ஆளுநர் கூறியுள்ளார். காந்தி மண்டபத்தில் ஆளுநர் மற்றும் அவரிடம் சென்று கேமராமேன் அவர்களின் கண்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் தெரிந்துள்ளது. சென்னை மாநகராட்சி காந்தி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் சிறப்பான சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாக குப்பை  இருக்கும் இடமான மெரினா கடற்கரை கூட சுத்தமாக வைத்துக்கொள்ளும் அரசாங்கம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும், வீட்டை  நாம் பாதுகாப்பாக தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வீட்டில் ஒரு திருடன் பூந்து விட்டால் நம் வீட்டில் பாதுகாப்பு இல்லை என கூறிவிட முடியாது. ஏன் திருடன் வரும்பொழுது பாதுகாப்பு குறைவாக இருந்தது என்று கண்டறிவதை விட்டுவிட்டு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் உள்ளது என அவருடைய மன உளைச்சலை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் தெரியும் காந்தியடிகள் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனாலும் இந்திய முழுவதும் பல சூதாட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது.

திராவிட மாடல் திமுக அரசு மதுவிலக்கு எப்போதும் ஆதரவாக உள்ள அரசு.ஆனால் மது ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு மட்டும் கையில் எடுக்க முடியாது.அனைத்து மாநிலங்களை ஒன்றிணைத்து மத்திய அரசு தான் அந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும். மத்திய  அரசு எடுக்கும் நடவடிக்கை அதிகப்படியான முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்றார். 

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது.இந்தியா முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும்.

அமைச்சர் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதற்கு அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தார்.அந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் இணைப்பதற்கு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் ஆளுநர்  ரவி இழுத்தடித்தார்.பின்னர் உச்சநீதிமன்றம் சென்றோம்.

மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில் நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச்சாராயம் பெருகும், இதன் காரணமாக இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடைமுறை ஏற்படுத்த முயற்சி செய்வார் முதலைச்சர் மு.க. ஸ்டாலின். 

தமிழகத்தில் அனைவரும் அண்ணன், தம்பி என்று தான் உள்ளோம்.இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் என்று உணர்வோடு தான் இருக்கிறார்கள், ஒருவரை பார்த்தவுடன் இவர் எந்த ஜாதி என வாய் விட்டு கேட்காத நிலையில் உள்ளார்கள். இந்தியாவில் அமைதி பூங்கா தமிழ்நாடு விளங்குகிறது. அனைவரையும் சகோதரத்துவத்தோடு உள்ளோம். தமிழகத்தில் தலித்துகள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள் என எந்த புள்ளிவிவரமும் கிடையாது. தலித்துகளை மட்டும் தாக்க வேண்டும் என எவரும் முயற்சி செய்யவில்லை. 

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருவருக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாக தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அவர் அரசியல் செய்யும் காரணங்களால் தான் இங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் இருக்கும் எந்த ஆளுநரும் ஒரு பொதுக்கூட்டம் போல் மக்களை கூட்டி பேசியதில்லை. 

 நாங்கள் ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவர் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டுமே. ஆளுநர் ஆர்.என். ரவி மேகாலயா, பீகார் போன்ற பல்வேறு வட  மாநிலங்களுக்கு சென்று அங்கு  பணியாற்றியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி மனசாட்சியுடன் மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் இருக்கும் வித்தியாசத்தை  பேச தயாராக இருக்கிறாரா ?  தமிழகத்தில் இருக்கும் சமத்துவத்தை போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இல்லை . சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரிகள் ஏற்றப்படுகிறது. அது சார்ந்து வரிகள் ஏற்றப்படும் துறைகள் பார்த்துக் கொள்வார்கள்.தமிழகத்தில் இருக்கும்  மதுகடைகள் 50 சதவீதம் மூடினாலும் அதே நிலை தான் நீடிக்கும்.ஆகவே  பூரண மதுவிலக்கு  தான் மக்கள் முன்னேற்றத்திற்கு உதவும். 

தமிழகத்தில் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்வது யாரும் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் இருக்கும்போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.ஆனால் அண்டை மாநிலங்களில் இருந்துவரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது கடினம்.  வெளிமாநிலங்களில் இருந்து வரும் போதைப்பொருட்களை நாங்கள் முடிந்தவரை தடுத்து வருகிறோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தி வருகிறோம்.சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

தலித்துகளுக்கு ஆபத்து மற்றும்  அவர்கள் மீது வன்முறை நடைபெறுகிறது என்பது வதந்திகள் மட்டுமே. அனைவரும் அண்ணன், தம்பிகள் போல் இருக்கிறார்கள். எங்காவது அதைப் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது தடுக்கப்படும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow