உங்களோடது பழைய மாடல் வண்டியா? E20 பெட்ரோலால் வந்த சிக்கல்.. எச்சரித்த அரசு!
இந்தியாவில் E20 பெட்ரோல் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், பழைய BS-III வாகனங்களில் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் அவர் அளித்த தகவலின்படி, 2005 ஏப்ரல் 1 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட BS-III வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ரப்பர் சீல்கள், O-rings, எரிபொருள் குழாய்கள் (Fuel Hoses), கேஸ்கெட்டுகள் மற்றும் ஃபியூயல் பம்ப் தொடர்பான சில பாகங்கள் E20 பெட்ரோலின் தாக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தப் பாகங்களை வழக்கமான சர்வீஸின்போதே எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) மேற்கொண்ட ஆய்வில், E20 பெட்ரோல் பயன்பாட்டால் பழைய BS-III வாகனங்களில் உள்ள சில ரப்பர் மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட பாகங்கள் கடினமாதல், நெகிழ்வுத்தன்மை குறைதல், பலவீனமாதல் மற்றும் வீக்கம் போன்ற மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால் எரிபொருள் கசிவு, சீலிங் பிரச்சினைகள் மற்றும் பாகங்களின் ஆயுட்காலம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, E20 பெட்ரோலை பயன்படுத்தும் பழைய BS-III வாகன உரிமையாளர்கள் வழக்கமான பராமரிப்பின்போது எரிபொருள் அமைப்பில் உள்ள ரப்பர் பாகங்களை பரிசோதித்து, தேவைப்பட்டால் மாற்றுவது பாதுகாப்பான நடைமுறையாக இருக்கும்.
What's Your Reaction?

