ஆட்சி மாறியும் பாட்டிலுக்கு 10 ரூபாய் நிற்கவே இல்லை : வெளுத்து வாங்கிய கனகராஜ்!

இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

Aug 2, 2026 - 19:00
Aug 1, 2026 - 18:08
ஆட்சி மாறியும் பாட்டிலுக்கு 10 ரூபாய் நிற்கவே இல்லை : வெளுத்து வாங்கிய கனகராஜ்!

சி.பி.ஐ. வீரபாண்டியன், 'சூழல் அமைந்தால் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெறுவோம்' என்று தெரிவித்துள்ளார். சி.பி.எம். நிலைப்பாடு என்ன?

"எங்களுக்கு போதுமான மக்கள் பலம், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலம் கிடைக்காதவரை அமைச்சரவையில் சேர மாட்டோம்."

ஆனால், அமைச்சரவையில் பங்கேற்றால் உங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கும் தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கும் தீர்வு காண உதவியாக இருக்குமே?

'அமைச்சரவை முடிவுகள் என்பது கூட்டுப் பொறுப்பு. எங்கள் சார்பில் ஓர் அமைச்சர் இருந்தால், தனிப்பட்ட முறையில் அவர் நேர்மையாக, எளிமையாக இருக்கலாம். மற்றபடி தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கூலியை கேரளாவுக்கு இணையாக ஒரு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நினைத்தால் மாற்றிவிட முடியுமா? அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வி.சி.க. அமைச்சர் வன்னியரசு, பேரவையில் பிரதமர் குறித்து பேச ஆரம்பித்ததும், சபாநாயகர் தடுத்துவிட்டார். அதுவே அமைச்சராக அவர் இல்லையென்றால் பவர்ஃபுல்லாக பேசியிருப்பார்.கூட்டு அமைச்சரவை எனும்போது, இயல்பான சுயேட்சை தன்மையை இழக்க வேண்டி வரும். அமைச்சர் பதவி இருந்தால் ஆயுதம் ஏந்திய நான்கு போலீஸார் வருவார்கள். சின்னதாக ஒரு சொகுசு கிடைக்கும். இதற்கு மேல் அதில் என்ன இருக்கப்போகிறது? 1996ல் ஜோதிபாசுவை பிரதமராக்க எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்தனர். நாங்கள் மறுத்தோம் என்பது வரலாறு."

த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் என்ன நன்மைகள் கிடைத்துவிட்டதாக கருதுகிறீர்கள்?

'த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் நாங்கள் சில விஷயங்களை வரையறுத்துக் கொண்டுள்ளோம். இந்த அரசு நீடிக்கட்டும். ஆனால், தவறு செய்தால் தட்டிக் கேட்போம். ரத்தன் பண்டிட் நியமனம், விவசாயக் கடன் தள்ளுபடி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைவது, துணைவேந்தர் நியமனம், தூய்மைப் பணியாளர் நியமனம் என பல விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம். அவர்களும் அதனை ஏற்றுள்ளார்கள். எங்களுக்கு மக்கள் நலன்தான் பிரதானம். பதவிகள் பெரிதல்ல."

பா.ஜ.க. இண்டியா கூட்டணியில் த.வெ.க.வும், தி.மு.க.வும் இணைய வேண்டும் என திருமாவளவன் தெரிவிக்கிறாரே?

"இன்றைக்கு நாடு இருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்க்க ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டில் குதிரை பேரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஆம் ஆத்மி, திரிணாமூல், சிவசேனா போன்ற கட்சிகளை உடைத்து ஜனநாயகத்தை சிதைக்கிற வேலையை பா.ஜ.க. செய்துவருகிறது. அதனால், அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்."

அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா?

"அதற்கான அரசியல் சூழல் வரும். கட்சிகள் இதை செய்யாவிட்டால், அதற்கான போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து, செய்து முடிப்பார்கள். நமது பிரதான பிரச்னைகள், நோக்கம் எது என்பதை மறந்துவிட்டு, சில்லறை சண்டைகளில் ஈடுபட்டுவருகிறோம்"

த.வெ.க. ஆட்சி அமைந்ததும் ஊழல் ஒழிந்துவிட்டதாக கூறுகிறார்களே? என்று "ஊழல் குறைந்துவிட்டது பேசுகின்றனர். புகார் செய்ய டோல் ஃப்ரீ நம்பர் வெளியிட்டிருந்தார்கள். அந்த எண்ணுக்கு கூப்பிட்டேன். போனை எடுத்தவர், தனியார் பீடி கம்பெனி பெயரை சொல்லி அங்கிருந்து பேசுவதாக சொல்கிறார். 

அரசு மாறிவிட்டது. அமைச்சர் மாறிவிட்டார். பார்ட்டி ஃபண்டும் இல்லை. ஆனால், பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூல் நீடிக்கிறது. 'யாராவது லஞ்சம் கேட்டால் என் பேரை சொல்லுங்க' என்று முதல்வர் பேசினால் அது ஒரு பாசிட்டிவ் மெசேஜ். அதனாலேயே லஞ்சம் ஒழிந்துவிடும் என்று நினைப்பது மாயை. அரசியல் எதிரி எனும் முறையில் தி.மு.க.வை விஜய் விமர்சிக்கிறார். ஆனால், கொள்கை எதிரி பா.ஜ.க. குறித்து வாய் திறக்க மறுக்கிறார்."

லாக் அப் மரணங்கள் இந்த ஆட்சியிலும் தொடர்கின்றனவே?

"மக்களைப் பாதுகாக்கத்தான் காவல்துறையை அரசு வைத்துக்கொண்டுள்ளது என்று யாராவது நினைத்தால், 'ஐயோ.. பாவம்!' என்று சொல்லத் தோன்றுகிறது. அது அரசின் ஒடுக்குமுறை கருவியாகத்தான் செயல்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் மரியாதையுடன் நடத்துவதில்லை. தி.மு.க. ஆட்சியில் லாக் அப் மரணம் நடந்த போது அப்போதைய முதல்வர் ஸ்டாலின் ஸாரி எதுக்கு சார்?' என்று விஜய் கொலை சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வாய் திறக்க மறுக்கிறார்."

இடதுசாரிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறீர்களே?

"மக்களின் கோரிக்கைகளுக்காக சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.எம்.எல் ஆகிய மூன்று தரப்பும் சேர்ந்து போராடுவது என முடிவெடுத்துள்ளோம். அது தேர்தல் அணிச்சேர்க்கை அல்ல. தேர்தல் வரும்போது, வெவ்வேறு அணியில் போட்டியிடும் நிலைகூட ஏற்படலாம்."

மேகதாது தொடர்பாக கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?

"உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளையும் உத்தரவுகளையும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். இரு மாநிலங்களையும் கட்டுப்படுத்தவும், கட்டுப்படாவிட்டால் உத்தரவை அமல்படுத்தும் அதிகாரமும் ஆணையத்திற்குத்தான் உள்ளது. எனவே, இந்த பேச்சுவார்த்தை தேவையில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow