இடைத்தேர்தல் நடக்குமா ? தடைகோரிய வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன ?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sep 16, 2026 - 13:30
இடைத்தேர்தல் நடக்குமா ? தடைகோரிய வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன ?
High Court Refuses to Halt Bypolls

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இடைத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக ராஜினாமா செய்வதால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது என்றும், இதனால் அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், மக்களின் வாக்குரிமையும் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மக்கள் அளித்த தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இடைத்தேர்தலுக்கு தடை கோரிக்கை :

இந்த வழக்கு முடிவடையும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

"மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுகிறது" - மனுதாரர் தரப்பு :

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "மக்கள் வாக்களித்து தேர்வு செய்த பிரதிநிதிகள் குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்வதால் மீண்டும் தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகிறது. இதனால் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுவதுடன், தேர்தல் செலவுகளும் அதிகரிக்கின்றன" என வாதிடப்பட்டது.

இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ராஜினாமா செய்ய எம்எல்ஏக்களுக்கு உரிமை உள்ளது - நீதிபதிகள் கருத்து :

விசாரணையின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது பதவியை ராஜினாமா செய்ய சட்டப்படி உரிமை உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், மக்கள் வாக்களித்து தேர்வு செய்த பிரதிநிதிகள் எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் பதவியை விட்டு விலகுவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க தேர்தல் ஆணையத்திடம் ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதால் தடை இல்லை :

தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தேர்தல் ஆணையம் பதிலளிக்க கால அவகாசம் கோரியது :

இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய சூழல் குறித்து முழுமையாக ஆய்வு செய்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்குக் கூட சட்டப்படி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

மேலும், எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிய நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow