"ஒரு தொகுதி நிச்சயம் வேண்டும்..!" அடம் பிடிக்கும் மனிதநேய மக்கள் கட்சி... தலைவலியில் திமுக...

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என மிக அழுத்தமாக திமுகவிடம் கேட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Mar 2, 2024 - 12:29
"ஒரு தொகுதி நிச்சயம் வேண்டும்..!" அடம் பிடிக்கும் மனிதநேய மக்கள் கட்சி... தலைவலியில் திமுக...

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அறிவாலயத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன், திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக திமுகவுடன் இணைந்து செயலாற்றி வருவதாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என மிக அழுத்தமாக கேட்டிருப்பதாகவும், இது குறித்து திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு பரிசீலிக்கக் கூறி இருப்பதாகவும் கூறியுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை, பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்று இருப்பதாகவும், அதேபோல எந்தத் தொகுதியை கொடுத்தாலும் வெற்றிபெறக் கூடிய வல்லமை திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைப்பதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

தொடர்ந்து இந்தியா கூட்டணி மிக வலுவாக செயல்பட்டு வருவதாகவும்,  அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பக்கூடிய உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி என காங்கிரஸ் - ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் சிறப்பான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow