இளையராஜா இசை + தியாகராஜன் நடிப்பு... மம்பட்டியான் செய்த மேஜிக்!
80களில் தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டை உருவாக்கிய ‘மலையூர் மம்பட்டியான்’ படமும், மம்பட்டியான் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தியாகராஜனின் பயணமும் விவரிக்கிறது இப்பதிவு.
கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா!- வி.ராம்ஜி
திரையுலகில் எண்பதுகளில் எவரெல்லாம் பிரபலங்களோ அவர்கள் அத்தனை பேரிடமும் தொடர்பில் இருந்தவர் தியாகராஜன். வியாபாரம் சினிமா தொடர்பு உடையது என்பதால், தயாரிப்பாளர்களும் பழக்கம். பாரதிராஜா, இளையராஜா முதலானவர்களும் நெருக்கம். அப்படித்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமானார் தியாகராஜன். டேவிட் எனும் அவரின் கேரக்டரை மறக்கவே முடியாது. அந்தக் கோபக்கார கதாபாத்திரத்துக்கு அவருடைய தாடிதான் ப்ளஸ் பாயிண்ட்.
இத்தனைக்கும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில், ராதாவின் அண்ணன் அண்ணி கேரக்டருக்கு சந்திரசேகரையும் வடிவுக்கரசியையும் தேர்வு செய்திருந்தார் பாரதிராஜா. ஆனால் என்ன நினைத்தாரோ... சந்திரசேகருக்கு பதிலாக தியாகராஜனை டிக் செய்தார். வடிவுக்கரசிக்கு பதிலாக சில்க் ஸ்மிதாவை தேர்வு செய்தார். இதன் பிறகு ‘டிக்டிக்டிக்’, ‘பாயும் புலி’ என பல படங்களில் துணை கேரக்டர், சின்ன வில்லன் மாதிரியான வேடங்களில் நடித்த தியாகராஜன், விஜயகாந்த், சத்யராஜ் முதலானோருடன் நாயகனாகவும் வலம் வந்தார். அப்படிப்பட்ட வேளையில்தான் ‘மலையூர் மம்பட்டியான்’ வந்தது. மிகப்பெரிய வசூலைக்குவித்தது.
1983-ம் ஆண்டு, கமலுக்கு பல படங்கள் வந்து வெற்றி பெற்றன. அதேபோல் ரஜினிக்கும் வெற்றியைக் கொடுத்த படங்கள் ஏராளம். கமலுக்கு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ 200 நாள் ஓடிய படமாக அமைந்தது. அதேபோல், ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் பூர்ணிமாவுடன் ரஜினி நடித்த ‘தங்கமகன்’ படம், வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது.
இதேவருடத்தில், கோவைத்தம்பியின் தயாரிப்பில் மோகன் நடித்து வெளியான மணிவண்ணனின் ‘இளமைக்காலங்கள்’ திரைப்படம் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. காதலர்களுக்கு இதம் தரும் படமாக ‘இளமைக் காலங்கள்’ இருந்தது. இதே காலகட்டத்தில்தான், டி.ராஜேந்தரின் பாய்ச்சல் டேக் ஆஃப் ஆனது. கல்யாணம், காதுகுத்து என எல்லா வீடுகளிலும் ‘உயிருள்ள வரை உஷா’வும் ‘தங்கைக்கோர் கீதம்’ படப் பாடல்களும் ஒலிபரப்பாகிக் கொண்டே இருந்தன.
பாரதிராஜா ‘மண்வாசனை’ எடுத்தார். மதுரையில் ஒருவருடம் கடந்து ஓடியது. அதேபோல் பாக்யராஜ் ‘முந்தானை முடிச்சு’ எடுத்தார். இதுவும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.வசூலில் அளப்பரிய சாதனைகளை இந்த இரண்டு படங்களும் ஏற்படுத்தின.
இந்தக் காலகட்டத்தில்தான், இந்த வருடத்தில், ராஜசேகர் இயக்கத்தில், ‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படம் வெளியானது. தியாகராஜன் மம்பட்டியான் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரின் ஹேர் ஸ்டைலும் லேசான தாடியும் முகமும் கண்களும் அந்தக் கேரக்டருக்கு ஆகச்சரியாகப் பொருந்தின. போதாக்குறைக்கு அவரின் கரகர குரல், போதையுடனான பார்வை எல்லாமே அட்டகாசமாகப் பொருந்தியது.
படத்தின் நாயகி சரிதா. மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். அதேபோல், ஜெயமாலினியும் சில்க் ஸ்மிதாவும் நடித்திருந்தார்கள். நம்மை கலகலவென காமெடி செய்து அதகளம் பண்ணும் காமெடி ராஜா கவுண்டமணி, வில்லத்தனத்தில் மிரட்டினார். அந்தக் காலகட்டத்தில் பல படங்களில் கவுண்டமணியின் வில்லத்தனத்தைப் பார்க்கலாம்.
படத்தின் நாயகன் ‘மம்பட்டியான்’ தியாகராஜன். இன்னொரு ஹீரோ... இளையராஜா. எல்லாப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. அதேபோல், டைட்டில் பாடலை பாடியிருப்பார் இளையராஜா. ‘காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே’ என்ற டைட்டில் பாட்டு, செம ஹிட்டு. இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.
சரி... மலையூர் மம்பட்டியானுக்கு வருவோம். சேலம் அருகே நடந்த உண்மைக்கதையை, சினிமாவாக்கினார் இயக்குநர் ராஜசேகர். இந்த கமலுக்கும் ரஜினிக்கும் ஹிட்டுகளைத் தந்திருக்கிறார். கமலுக்கு காக்கிசட்டை, விக்ரம். ரஜினிக்கு, தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன், தர்மதுரை... இன்னும் இன்னும்!
பழிக்குப் பழி வாங்கும் கதைதான். ராபின் ஹுட் மாதிரியான கதைதான். காதலை கவிதையாகச் சொன்னதும் இதில் உண்டு. காமெடியையும் கவர்ச்யையும் கூட குழைத்துக் கொடுத்தார்கள். தியாகராஜனும் அவர் போர்த்தியபடி வருகிற போர்வையும் கட் அவுட்டுகளில் மிரட்டின. இப்படியாக எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அத்தனையும் கலந்து வந்த ‘மலையூர் மம்பட்டியான்’ ஆகச்சிறந்த டிரெண்ட் செட்டர் படமாகவே அமைந்தது. ‘’இப்படி படமெடுத்தால், வெற்றி நிச்சயம். முதலுக்கு மோசமில்லை’’ என்கிற உத்தரவாதத்தைத் தந்தது.
தமிழ் சினிமாவில் தாடி வைத்த ஹீரோ.. முதல் ஹீரோ தியாகராஜன் தான்! ஒரு வீரதீரசூரனை, மிகப்பெரிய ஆளுமையை, உடன் இருக்கிற சாமான்யன் ஒருவன் ‘போட்டுத்தள்ளுகிறான்’ வேலு நாயக்கர் விஷயத்திலும் நடந்தது. சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ கஞ்சா கருப்புவும் அப்படித்தான்! இந்த வேலையை செந்தில் அப்போதே, மம்பட்டியானுக்குச் செய்திருப்பார்!
‘மலையூர் மம்பட்டியான்’. இந்தப் படத்துக்குப் பிறகு தியாகராஜனுக்கு இதேமாதிரியான படங்கள் வரிசைகட்டி வந்தன. அதில் ஓரிரு படங்களே நல்ல கதையோடு வந்தன. அதேபோல், தியாகராஜனை மம்பட்டியான் தியாகராஜன் என்றே ரசிகர்கள் அழைத்தார்கள். இதையடுத்து விஜயகாந்துக்கு ‘கரிமேடு கருவாயன்’ மாதிரியான படங்களும் வந்தன. முரளிக்கு ‘வாட்டாக்குடி இரணியன்’ மாதிரியான படங்களும் வந்தன. நெப்போலியன் ‘சீவலப்பேரி பாண்டி’யாக வந்து மிரட்டியதையும் மறக்கமுடியாது!
தயாரிப்பாளராக, நடிகராக, இயக்குநராக இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கிறார் தியாகராஜன். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏதேனும் ஒரு படம் வரும். ‘டிரெண்ட் செட்டர்’ படமாக அமையும். அதையடுத்து பத்துமுப்பது படங்கள் வரும். எண்பதுகளில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன், கார்த்திக் முதலானவர்களுக்கு சத்தமே இல்லாமல் டிரெண்ட் செட்டராக்கிய மம்பட்டியான் தியாகராஜன், இன்றைக்கு டாப் ஸ்டார் பிரசாந்தின் அப்பா என எல்லோராலும் சொல்லப்படுகிறார்!
What's Your Reaction?