கண்ணொளி தந்த சிவபெருமான்... சுந்தரர் நாயனாரின் அற்புத வரலாறு!

சுந்தரர் நாயனாரின் பக்தியும், கண்ணொளி பெற்ற அற்புத வரலாறும், பார்வைக்கு அருள் தரும் என நம்பப்படும் தேவி ஸ்லோகத்தின் மகிமையையும் விரிவாகப் பார்போம்.

Sep 20, 2026 - 07:00
கண்ணொளி தந்த சிவபெருமான்... சுந்தரர் நாயனாரின் அற்புத வரலாறு!

பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி

புராணங்கள் பல இருந்தாலும் நாயன்மார்களின் சரிதங்களைச் சொல்லும் பெரிய புராணம் மகத்துவம் மிக்கது. நம்மைப்போல் மனிதர்களாகப் பிறந்து, சிவத்தொண்டாலும் சிவ பக்தியாலும் முக்தி அடைந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் மொத்த வாழ்க்கையே பெரிய புராணம் எனப்படுகிறது. நாயன்மார்களில் ஒவ்வொருவரும் அவர்களின் பக்தியாலும் செயல்களாலும் நம்மைத் திளைக்க வைத்தார்கள்.

இவர்களில் சுந்தரர் மட்டும் கூடுதல் ஸ்பெஷல். ‘நீ என் தோழன்’ என்று அந்த சிவபெருமான், சுந்தரரை தன் ஸ்நேகிதனாகவே வரித்துக்கொண்டார் என்கிறது புராணம்!

திருவாரூருக்கும் திருவொற்றியூருக்கும் சுந்தரருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றாலும் வழிநெடுக இருக்கின்ற சிவாலயங்கள் பலவற்றைத் தரிசனம் செய்தார் சுந்தரர். நடந்து, களைத்து, வலியால் துவண்ட சுந்தரருக்கு, கண்பார்வையும் மங்கிப்போனது.

’எனக்கு வழி கொடு, என் கண்ணுக்கு ஒளி கொடு’ என்று சிவபெருமானை நினைந்து மனமுருகி, கண்ணீர் மல்க பதிகம் பாடினார். கண்ணில் ஒளியைப் பெற்றார். கண் பார்வையால் தவித்து மருகிய சுந்தரர், பதிகம் பாடி கண்ணொளி பெற்ற சரிதம் நாம் அறிந்ததுதான். இதேபோல், கண்ணொளிப் பெருமாள் கோயில் என்றே வைஷ்ணவக் கோயிலும் அமைந்திருக்கிறது.

கண்ணுக்கு ஒளி தருவதில், தேவியும் சளைத்தவளா என்ன? கண் பார்வையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். விரைவிலேயே கண் பார்வை சரியாகும். குணமாகும். அவளும் பேரருள் புரிவாள் என்கிறார் நடராஜ குருக்கள்.

கண்பார்வையில் ஒரு சிலருக்குக் குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாகலாம். பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இந்த ஸ்லோகத்தை ஆத்மார்த்தமாகப் பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அந்த ஸ்லோகம் .. .

லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:
மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா:
ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:
உன்மீலனேன தவ தேவி நிமீலனேன.

அதாவது, ’தேவி... பக்தர்கள் கேட்கும் வரங்களை, நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய்’ என்கிறது.

கண்ணுக்கும் உள்ளத்துக்கும் ஒளியைத் தருகிற, பார்வைக்கு பலம் சேர்க்கிற ஸ்லோகம் சொல்லி வேண்டுவோம். உள்ளொளியும் கண்ணொளியும் பெறுவோம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow