பாமகவை உடைத்த ஜி.கே.மணி &கோ? ராமதாஸிற்கு உண்மை உணர்த்திய மகள்...
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையேயான நீண்டகால மோதல் முடிவுக்கு வந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த சமரசத்துக்குப் பின்னணியில் குடும்ப அழுத்தமும், கட்சிக்குள் நடந்த அதிகாரப் போட்டியும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா!' என கடந்த ஓராண்டுக்கும் மேலாக மல்லுக்கட்டி வந்த தந்தையும், மகனும் இன்று... 'விதிகள் நம்மைப் பிரித்தபோதும், குருதியின் சொந்தம் அழியவில்லை' என பாடியபடி கட்டியணைத்து கண்ணீர் சிந்தி ஒன்றிணைந்திருப்பதுதான் மாம்பழத் தோட்டத்து ட்விஸ்ட். ஆனால், இந்த திடீர் மனமாற்றம் எப்படி நடந்தது என வரும் தகவல்கள்தான் தலைசுற்றவைக்கும் ரகசியங்கள்!
இதுகுறித்த உள்விவரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம். “ராமதாஸ் - அன்புமணி இடையே வெடித்த அதிகார யுத்தம், பா.ம.க.வை இரண்டாக உடைத்தது. இதையடுத்து, சசிகலாவுடன் கைகோத்து 2026 தேர்தலை எதிர்கொண்ட ராமதாஸ் அணி, படுதோல்வி அடைந்தது. மாம்பழ சின்னத்தோடு அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்ற அன்புமணி, ஒரு ராஜ்யசபா பதவியோடு, 4 எம்.எல்.ஏ.க்களை வென்றார்.
இதனால் கடும் மனஉளைச்சலில் தவித்த ராமதாஸுக்கு ஆறுதலாக இருந்த ஸ்ரீகாந்தி, கட்சி செயல்பாடுகளில் ஆர்வம் காட்டிவந்தார். அவரின் செல்வாக்கு வளர்வதை விரும்பாத ஜி.கே.மணி, மறைமுகமாக முட்டுக்கட்டைகளை போட்டுவந்தார். வழக்கம்போல தோட்டத்துக்கு மதிய உணவுடன் வந்த அவர், ராமதாஸுடன் சென்டிமென்டாக பேசியபோதும், கட்சி வளர்ச்சி பற்றி கவலையே படவில்லை. இதற்கிடையே ஸ்ரீகாந்தியிடம் தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகனும், மாஜி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் பேசியிருக்கிறார்கள்.
அப்போது, 'தி.மு.க -ராமதாஸ் கூட்டணி நடக்காமல் போனதற்கு ஜி.கே.மணிதான் காரணம். அவர் கடைசிநேரம்வரை கூட்டணியை உறுதிப்படுத்தவே இல்லை. எங்கள் தலைவர் அய்யாவிடம் போனில் பேச முற்பட்டபோதும்கூட அவர் போனை அய்யாவிடம் தரவில்லை' என சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து, 'திருமா எதிர்க்கிறார் என என நம்பவைத்து மணி நாடகமாடவேண்டிய அவசியம் என்ன? தேர்தலுக்குப் பிறகும் அமைதியாக இருக்கவேண்டிய அவசியம் என்ன?
என்று ஸ்ரீகாந்திக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. தொடர்ந்து மணியின் நடவடிக்கைகளை கூடுதலாக கவனிக்க தொடங்கியதோடு, மேலும் சில விஷயங்களை அவர் தீவிரமாக விசாரித்திருக்கிறார். இதற்கிடையே, பா.ம.க.வை மீட்பதற்கான போராட்டம் ஒருபுறம் தொடரட்டும். அதுவரை, அய்யா பா.ம.க.வை கட்டமைப்போம். வன்னியர் சங்கத்தை வலிமைப்படுத்துவோம். எனக்கும் அறக்கட்டளையில் அதிகாரம் வேண்டும்' என ஸ்ரீகாந்தி கேட்டிருக்கிறார். அதிலிருந்துதான் ஜி.கே.மணியுடன் பா.ம.க முக்கிய நிர்வாகிகளான சிவப்பிரகாசம், ஸ்டீல் சதாசிவம், கரூர் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் இணைந்து ஸ்ரீகாந்திக்கு எதிரான வேலைகளை தொடங்கியிருக்கின்றனர்.
அதாவது, ராமதாஸ் காலத்திற்குப் பிறகு அறக்கட்டளையை டேக் ஓவர் செய்யவேண்டும் என்பதுதான் இந்த டீமின் எண்ணமாக இருந்திருக்கிறது. அது ஈடேற வேண்டும் என்றால், ஸ்ரீகாந்தி எந்த வகையிலும் வலிமை அடைந்துவிடக்கூடாது என முடிவெடுத்து செயல்பட்டுள்ளனர். வழக்கமான சந்திப்பின்போது ஒருநாள், 'ஸ்ரீகாந்தி எல்லாவற்றிலும் அவசரப்படுகிறார். உங்களை மீறி செயல்படுகிறார் என ராமதாஸிடம் சொல்லி அன்புமணியைப்போல அவரையும் தனிமைப்படுத்த முயன்றுள்ளது ஜி.கே. மணி டீம். அதை நம்பிய ராமதாஸ், தன் மகளிடம் தன்னைமீறி செயல்படுகிறாயா என நேரடியாக கேட்கவே.. கோபமடைந்த ஸ்ரீகாந்தி, 'உங்களால் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு போகமுடியாது என்பதால் நான் போகிறேன். நீங்கள்தான் என்னை செயல்தலைவர் ஆக்கினீர்கள். ஆனால் செயல்பட கூடாதென்றால் எப்படி? என்று கேட்டிருக்கிறார்.
தன்மீது தந்தை கோபப்படுவதற்கான காரணம் குறித்து விசாரித்தபோதுதான் ஜி.கே.மணி டீம் தனக்கு எதிராக செயல்படுவது குறித்து ஸ்ரீகாந்திக்கு தெரியவந்திருக்கிறது. இதைவிட அதிர்ச்சியாக, தன் மகனை காப்பாற்றுவதற்காக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஜி.கே.மணி சண்டையை தூண்டிவிட்டிருக்கிறார் என்ற ஷாக் நியூஸும் ஸ்ரீகாந்திக்கு கிடைத்திருக்கிறது.
அதாவது, பா.ம.க. பிளவுக்கு முன்பாக முக்கிய வாரிசு பிரமுகரை துபாய் விமான நிலையத்தில் இந்திய விசாரணை அமைப்பு ஒன்று மடக்கியிருக்கிறது. அவரை விடுவிக்க, டெல்லி உதவியை நாடியிருக்கிறது மணி டீம். அப்போதுதான் ஒரு அஜென்டா அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ஆட்டத்திற்கு ஏற்ப பா.ம.கவை உடைத்ததுடன், தி.மு.க.வுடன் ராமதாஸ் கூட்டணி சேர்வதையும் மணி தடுத்திருக்கிறார். இதையெல்லாம் ராமதாஸிடம் பாஸ் செய்திருக்கிறார் ஸ்ரீகாந்தி. அப்போது அன்புமணியைப்போலவே தன்னையும் உங்களிடம் இருந்து பிரிக்க அவர் முயற்சி செய்கிறார் என்ற விவரத்தை கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்தி,
இதன் பிறகே ராமதாஸ் மனம் மாறியிருக்கிறார். குடும்ப உறவுகளின் அழுத்தமும் கூடுதலான நேரத்தில் தந்தை மகனுக்கு இடையே இருந்த 'பசை' பிரச்னையும் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகே, ராமதாஸ் சரஸ்வதியின் 61வது திருமண நாள் விழாவில் அன்புமணியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அப்பா, மகனுடனான உணர்ச்சிகரமான சந்திப்பின்போது ஸ்ரீகாந்தி அங்கு இல்லை.
அன்புமணி குடும்பம் புறப்பட்டுச் சென்ற சில மணிநேரத்திற்குப் பிறகு கணவர், மகனுடன் வந்திருக்கிறார் ஸ்ரீகாந்தி. அப்போது, 'தம்பியிடம் கட்சி மற்றும் சங்க பொறுப்புகளை திருப்பி கொடுப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், எனக்கான முக்கியத்துவம் குறையக் கூடாது என சொல்லிவிட்டு அவரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார். சுபதினத்தில் குடும்ப பிளவு சரியாகிவிட்டதால், விரைவில், அன்புமணி வசம் கட்சியும், வன்னியர் சங்கமும் ஒப்படைக்கப்படலாம். இந்த சந்திப்பினால் ஜி.கே.மணி தானாகவே ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது" என்று விரிவாக சொல்லி முடித்தனர்.
இதுகுறித்து விளக்கம் பெற ஜி.கே.மணியிடம் பேசினோம். "எனது கருத்தை பேட்டியாக ஏற்கெனவே சொல்லிவிட்டேன். உங்களுடைய மற்ற கேள்விகளுக்கு பிறகு பேசுகிறேன்" என கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்
காலம் கடந்த ஞானத்திற்குப் பிறகு தந்தை, மகனுக்கு நஷ்டமில்லை. ஆனால், இருதரப்பு ஆதரவாளர்களின் கதி?
What's Your Reaction?