ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்!

அரசியல் கட்சி தலைவராக தனது பணியை தொடங்கிய விஜய் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Oct 11, 2024 - 10:35
ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்!


அரசியல் கட்சி தலைவராக தனது பணியை தொடங்கிய விஜய் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியாரின் 146வது பிறந்நாள் செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறினர். நடிகரும் தவெக தலைவருமான விஜய் முதலில் மோடி பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார். இதனையடுத்து பெரியார் பிறந்தநாளுக்கும் வாழ்த்து சொன்னார். நேரடியாக பெரியார் திடலுக்கு சென்று அஞ்சலியும் செலுத்தினார்.

விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று கூறியிருந்தார். 

இதனையடுத்து விஜய் அரசியல் பயணம் திராவிட பாதையா? என்ற கேள்வி எழுந்தது. அவர் வாழ்த்து கூறிய சில மணி நேரங்களில் தனது வீட்டில் இருந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு புஸ்ஸி ஆனந்துடன் நேரில் வந்தார் விஜய். காரை விட்டு இறங்கி கையில் ரோஜா மலர் மாலையும் பூக்கள் நிரம்பிய தட்டினையும் கையில் எடுத்துக்கொண்டு பெரியார் சிலை அருகே சென்றார் விஜய். பூக்களை தூவி மாலையை வைத்து கைகளை கூப்பி பெரியாரை வணங்கினார்.

விஜய் மாணவர்கள் மத்தியில் பேசும் போதே மறைந்த தலைவர்கள் பற்றி பேசியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன் முறையாக நேரடியாக பெரியார் திடலுக்கு வந்து பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. இதன் மூலம் அரசியலில் தான் பயணிக்கும் பாதையை வெளிப்படுத்தியுள்ளாரா விஜய் என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது பேசுபொருளான நிலையில், தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும் அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வழிபடும் திருநாளையொட்டி வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தாங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow