கண்ணை மறைத்த கல்லூரி காதல்! குடும்பத்திற்கு விஷம் வைத்த கொடூரம்.. சிக்கன் ரைஸ் மரணத்தில் திடீர் திருப்பம்

May 3, 2024 - 11:26
கண்ணை மறைத்த கல்லூரி காதல்! குடும்பத்திற்கு விஷம் வைத்த கொடூரம்.. சிக்கன் ரைஸ் மரணத்தில் திடீர் திருப்பம்

காதல் விவகாரத்தை கண்டித்ததால், கல்லூரி மாணவர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் விஷம் வைத்து கொலை செய்ய துணிந்த பயங்கரம், தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டிய சேர்ந்தவர் 20 வயதான பகவதி. பொறியியல் மாணவரான இவர், கடந்த 30-ம் தேதி நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் தனது குடும்பத்தாருக்கு சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியிருக்கிறார். வாங்கிய பார்சல்களை கொசவம்பட்டியில் உள்ள தனது தாயார் நதியாவிற்கும், தேவராயபுரத்தில் வசித்து வரும் தனது தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தாருக்கும் கொடுத்திருக்கிறார். இதை சாப்பிட்ட நதியாவிற்கும், சண்முகநாதனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் அதை சாப்பிடவில்லை. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்தனர். அதேசமயம், உணவில் பூச்சிகொல்லி மருந்து கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் வெளியான தகவலால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து, பார்சலை வாங்கிச் சென்ற பகவதி, உணவக உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த பகவதி, பின்னா தனது காதலை குடும்பத்தார் எதிர்த்ததால், பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். 

அதுமட்டுமல்லாமல், திருமணமான பெண் ஒருவருடனும் பகவதி கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையும் அவரது குடும்பத்தார் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், ஆத்திரத்தில் குடும்பத்தையே கொல்ல திட்டம் போட்ட பகவதி, இதே மாவட்டத்தில் சர்வமா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த விவகார பாணியில், கொலை செய்ய பக்கா பிளான் போட்டு இருக்கிறார். இதற்காக கூகுளில் தேடி, "மோனோ குரோட்டோமஸ்"  என்ற பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிச் சென்று சிக்கன் ரைஸ் பார்சலில் கலந்ததும் விசாரணையில் அம்பலமானது. 

நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமான நிலையில், திடீர் திருப்பமாக மாணவர் ஒருவரின் இந்த இரக்கமற்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெற்ற தாய், தாத்தா, சகோதரர் என ஒட்டுமொத்த குடும்பத்தையே போட்டுத் தள்ளும் அளவிற்கு, இன்றைய காதல் கண்ணை மறைக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow