விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை நீக்கம்?பிப் 16-ல் நீதிமன்றம் விசாரணை
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
இந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு ச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயமும் உறுதி செய்து உத்தரவிட்டது.தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, கடந்த 2013 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், நீதிபதிகள், அனிதா சுமந்த், சுதிர் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, மத்திய அரசு தரப்பில், வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக இருப்பதாகவும், அவர் வெளியூர் சென்றிருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?

