வேட்பாளர்கள் கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தேர்தல் ஆணையம் அனுமதிக்காத நிலையில் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல

Jan 10, 2024 - 13:33
Jan 10, 2024 - 18:39
வேட்பாளர்கள் கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.  

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய தேர்தல் ஆணையர் 2021ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. 

திமுக மற்றும் அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும்,அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டனர். மாற்று கட்சி வேட்பாளர் படிவம் Bயின் படி அங்காகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதி வழங்குகிறார். 

கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதாக படிவம் B தெரிவிக்கிறது. ஆனால், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டத்தின் படி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மற்றொறு கட்சியில் உறுப்பினராக இல்லை என உறுதியளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர சின்னங்களை வேறு யாருக்கும் ஒதுக்குவது கிடையாது. பதிவு செய்யப்பட்ட மற்றும் சுயேட்சை  வேட்பாளர்களுக்கு வேறு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது. 

இதேபோல, 2019 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், படிவம் Aன்படி ஒருகட்சியில் உறுப்பினராக உள்ளவர், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நடத்தும் அதிகாரி அங்கீகரிப்பதால் கூட்டணி கட்சியினர் தேர்தல் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணையமும் எந்த தடையும் விதிக்கவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் ஆணையம் அனுமதிக்காத நிலையில் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow