சென்னை அரக்கோணம் புறநகர் ரயில் சேவை: இன்றும், நாளையும் ரத்து
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரக்கோணம் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணிகளால், ஒரே நாளில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம் பணிமனையில் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடவுப்பாதை மற்றும் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஜூன் 27-ஆம் தேதி இயக்கப்பட இருந்த 27 இமு மற்றும் மெமு புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4, 5, 5.50 மற்றும் 6 மணி, காலை 7.20, 9.15, 10 மணி, பிற்பகல் 2.50 மணி, மாலை 6.15 மணி, இரவு 7 மற்றும் 9 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை திருத்தணி, செங்கல்பட்டு, வேலூர், திருச்சானூர், மூர் மார்க்கெட் மற்றும் காட்பாடி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த சேவைகளாகும்.
மேலும், மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து இரவு 7.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், காட்பாடியிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு அரக்கோணம் வரும் விரைவு இமு, ஆவடியிலிருந்து மாலை 6.10 மணிக்கு மூர் மார்க்கெட் செல்லும் ரயில், திருத்தணியிலிருந்து இரவு 9.15 மற்றும் 11.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில்கள், செங்கல்பட்டிலிருந்து காலை 8.20 மற்றும் இரவு 8.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில்களும் ரத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கையால் அரக்கோணம், சென்னை, ஆவடி, திருத்தணி, வேலூர், காட்பாடி, திருச்சானூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு இடையிலான புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளது. எனவே பயணிகள் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து, பயணத்திற்கு முன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் சென்னைக்கு பணிக்கு வருபவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
What's Your Reaction?