காதல் விவகாரத்தில் மோதல்.. வீடு புகுந்து ஒருவரை முகத்தில் வெட்டிய கும்பல்!
சென்னை கோயம்பேடு அருகே காதல் விவகாரத்தின் போது ஏற்பட்ட மோதலால் ஒருவருக்கு முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின். இவருக்கும் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற நபருக்கும் பெண்ணை காதலிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் காதல் தொடர்பாக பிரச்சனை வந்த நிலையில் அஸ்வினை கொலை செய்யும் நோக்கில் விஷ்வா தனது நண்பர்கள் ஐந்து பேருடன் நேற்று இரவு அஸ்வின் வீட்டிற்கு சென்றுள்ளார். அத்துடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்ற போது அஸ்வினின் உறவினர் பூர்ணசந்திரன் (28) என்பவர் தடுக்க முயன்றுள்ளார். இதில் அவருடைய முகத்தில் வெட்டுக்காயம் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
வெட்டு வாங்கிய நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முகத்தில் 9 தையல்கள் போடப்பட்டுள்ளது. வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பலை கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






