துரைமுருகன் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை? இளைஞரை வேட்பாளராக களமிறக்க திமுக திட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் துரைமுருகனுக்கு விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை திமுக தேர்வு செய்து வருகிறது. தற்போது பல தொகுதிகளில் சீனியர்களுக்கு பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி மூத்த திமுக தலைவரான பொன்முடிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையெனவும் அவருக்கு பதிலாக அவரது மகன் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இதே போன்று ஐ.பெரியசாமி வாய்ப்பு வழங்கப்படுவது குறைவு என தெரிகிறது. ஏற்கனவே அவரது மகன் செந்தில் எம்எல்ஏவாக இருப்பதால், மீண்டும் அவருக்கு சீட் வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திமுகவில் முக்கிய தலைவராக பார்க்கப்படும் துரைமுருகன் கட்சி பணியை பார்த்து கொள்ள ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
துரைமுருகன் 1971 ஆம் ஆண்டு முதல் காட்பாடி தொகுதியில் பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற்று, 8 முறைக்கு மேல் இத்தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட மாட்டார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
What's Your Reaction?

