தலைமை செயலகம் எதிரே வாயு கசிவு, மூச்சு திணறல்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்
சென்னை துறைமுகத்தில் இருந்த வாயு கசிவு காரணமாக, தலைமை செயலகம் சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அச்சம் அடைந்தனர்.
சென்னை தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையில் மதியம் 12.15 மணியளவில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் தலைமை செயலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. திடீர் புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
தலைமை செயலகத்திற்கு அருகே இருக்கும் சென்னை துறைமுகத்தில் திடீரென சல்பர் வாயு கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர் ஒன்றில் இருந்து இந்த வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்டு இருந்த கந்தகம் தீப்பிடித்த எரிந்ததால் வாயு கசிவு ஏற்பட்டதாக மற்றொரு தகவல்கள் கூறுகின்றன. இந்த வாயு கசிவை சரி செய்யும் பணியில் துறைமுக ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
குறிப்பாக இந்த சல்பர் வாயு கசிவின் காரணமாக தலைமைச் செயலகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சென்னை உயர்நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு திடீரென இரும்பல் கண் எரிச்சல் சுவாச சிரமம் போன்றவை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திடீர் வாயு கசிவு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வெப்பம் காரணமாக வேதியல் மாற்றம் அடைந்து சல்பர் வாயு கசிவு காரணம் என சென்னை துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் வாயு கலந்து இருப்பால் பெரிய அளவிற்கு பாதிப்பு இருக்காது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாயு கசிவை தீயணைப்பு படை வீரர்கள் சரி செய்தனர்.
What's Your Reaction?