மதுரை உயர்நீதிமன்றத்தில் துப்பாக்கி சத்தம் : சிறப்புப் படை காவலர் பலி
மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற சிறப்புப் படை காவலர் 2023 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். சிறப்பு காவல்படை காவலரான மகாலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக நேற்றிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. சிறப்புப்படை காவலர் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குதானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருந்தார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்கள், மகாலிங்கத்தை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே காவலர் மகாலிங்கம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவலர் மகாலிங்கத்தின் உடல், பிரேச பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.காவலர் மகாலிங்கம் தற்கொலை சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

