நடிகர் கமல்ஹாசன் பெயர்,படத்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, தனி உரிமையை பாதுகாக்கும் வகையில், நீயே விடை நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனங்களும், தனது பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களை, தனது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என, நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர்.
இனத் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனுமதின்றி, வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, நீயே விடை நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார்.
அதேசமயம், கார்ட்டூன்களில் கமல் படத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.வேறு எவரும் அனுமதின்றி தனது புகைப்படம், பெயரை பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த உத்தரவு குறித்து தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கமல் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?

