கரூர் கூட்ட நெரிசல் : உச்சநீதிமன்ற குழு பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெறுகின்றனர்- தமிழக அரசு பதில் மனு
தவெக விஜய் பிரசாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் உச்சநீதிமன்ற அமைத்த குழுவினர் இன்று மனுக்களை பெற உள்ளனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் இறந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சிபிஐ) விசாரணை நடைபெற்று வருகிறது.
சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாகவும், இறந்தவர்கள் தொடர்பாகவும், அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையை மேற்பார்வை செய்திட உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவினர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, தலைமையில் கூடுதல் காவல்துறை இயக்குனர் சுமித் சரண், ஜோனல் வி.மிஸ்ரா இன்று கரூர் சிபிஐ அலுவலகம் வருகை தந்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள் அமைப்புகள் ஆகியோரிடம் மனுக்களை பெற உள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் சிபிஐ இதுவரை செய்த விசாரணையை ஆய்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து இந்த வழக்கு குறித்து மனு பெறும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, எஸ்பி ஜோஷி தங்கையா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. சிறப்புக்குழு விசாரணை சரியான திசையில் பயணித்ததால் அதற்கும், அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
What's Your Reaction?

