மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் பலி: விபத்தா, சதியா தீவிர விசாரணை
மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சித் தலைவருமான அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம், பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் அஜித்பவார் உள்பட 5 பேரும் உயிரிழந்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு தனிவிமானத்தில் பயணம்
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் அஜித் பவார் புறப்பட்டுள்ளார். பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
விபத்து எப்படி நடந்தது?
இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து கிளம்பிய இந்த விமானம், சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு 9 மணியளவில் பாராமதி விமான நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கு அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலிருந்து வெளிவரும் காட்சிகளில் விமானம் தீப்பற்றி எரிவதும், அதன் பாகங்கள் சிதைந்து கிடப்பதும் தெரிகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்த விமானத்தில் அஜித் பவாருடன் 6 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. முதலில் படுகாயம் அடைந்த அஜித் பவாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் பயணித்த அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசரமாகத் தரையிறங்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மகராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித்பவார் வாழ்க்கை குறிப்பு
மராட்டிய அரசியலில் பல்வேறு பரபரப்புகளை உருவாக்கி துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து பிளவை ஏற்படுத்தி தனியாக இயங்கினார் அஜித் பவார்.1982ல் தீவிர அரசியலில் நுழைந்த அஜித் பவார் புனே மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக 1991ல் தேர்வானார். தொடர்ந்து 16 ஆண்டுகள் கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் நீடித்தார். மராட்டிய சட்டமன்றத்துக்கு பாராமதி தொகுதியில் இருந்து 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் அஜித் பவார். மராட்டிய துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர் அஜித் பவார். 3 ஆண்டுகளுக்கு பிறகு சரத் பவார் கட்சியுடன் இணைய அஜித் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்தார்.
What's Your Reaction?

