கூவம் ஆற்றில் 50-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் கண்டெடுப்பு:பொதுமக்கள் அதிர்ச்சி, அதிகாரிகள் விசாரணை
கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் சிலைகள் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில இளைஞர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி பார்த்தனர்.
அப்போது கூவம் ஆற்றில் விநாயகர், முருகன், ஐயப்பன், பைரவர், நாரதர், நாகம்மன், வாசுகி உள்பட 50க்கும் மேற்பட்ட சாமி கற்சிலைகளை இருந்ததை கண்டு அந்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சிலைகளை ஆற்றில் இருந்து கரைக்கு எடுத்து வந்தனர்.
இந்த கற்சிலைகள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி மற்றும் கடம்பத்தூர் போலீசார், வருவாய்த் துறையினர் பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றுப்பகுதிக்கு வருகை தந்தனர்.
பின்னர் அனைத்து சிலைகளையும் வருவாய்த் துறையினர் மீட்டு திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆற்றுப் பகுதியில் தடுப்பணை இருப்பதால் சிலைகள் நீரில் அடித்து வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில சிலைகள் சேதமடைந்து காணப்படுவதால் யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?

