கேரளாவில் மீண்டும் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழக எல்லைகள் அலார்ட்
கேரளாவில் மீண்டும் நிஃபா வைரஸ் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக எல்லைகளில் அலார்ட் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் அடிக்கடி நிஃபா வைரஸால் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகிவிட்டது. தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான நபருக்கு முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோழிக்கோட்டில் குடோன் ஒன்றில் பாதிக்கப்பட்ட நபர் வேலை பார்த்து வந்த நிலையில், அங்கிருந்த வௌவால்கள் மூலம் இந்தத் தொற்று அவருக்குப் பரவியிருக்கலாம் என்று கேரள சுகாதாரத்துறை சந்தேகிக்கிறது. இவர் தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இறுதி உறுதிப்படுத்தலுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டுள்ளன. மேலும் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று கேரள மாநில சுகாதார துறை கூறியுள்ளது.
கேரளாவில் மீண்டும் நிஃபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழக-கேரள எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?

