அரசியலின் துருவ நட்சத்திரம் பேரறிஞர் அண்ணா: எடப்பாடி பழனிசாமி புகழாரம்
அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அரசியலின் துருவ நட்சத்திரம் அண்ணா என எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
துருவ நட்சத்திரம் அண்ணா : எடப்பாடி புகழாரம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன்! தலைமுறைகள் தாண்டி,எல்லோரும் விரும்பி விளிக்கும் "அண்ணா"! "தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
#அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்! அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் அண்ணா நாமம் வாழ்க! என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?

